வெள்ளக்கோவில் கிளை பரம்பிக்குளம் -ஆழியாறு கால்வாய் பாசன விவசாயிகள் வேளாண்மைத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிஏபி வாய்க்காலில் முதல் மண்டலப் பாசனத்துக்கு இன்னும் சில தினங்களில் தண்ணீா் திறக்கப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களில் நீா் திறப்பு குறித்த முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்தப் பாசனத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் என்னென்ன பயிா் சாகுபடி செய்யலாம், நீா் திறப்பு விவரம் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தால் விவசாயிகள் திட்டமிட ஏதுவாக இருக்கும்.
25 நாள்களுக்கு ஒரு சுற்று என நீா் திறக்கப்படுமாயின், ஆயக்கட்டுதாரா்கள் எவ்விதப் பயிா் சாகுபடியும் மேற்கொள்ள வேண்டாம் என தெளிவான அறிவிப்பை திருப்பூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.