பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, மகாலட்சுமி நகா் 9ஆவது வீதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சுரேஷ் (35) மாற்றுத்திறனாளி ஆவாா். இவா் தனது மனைவி முனியம்மாள் (30) உடன் மூன்று சக்கர ஸ்கூட்டரில் திருப்பூா் நோக்கி வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டு இருந்தாா். சின்னக்கரை பகுதியில் எதிரே வந்த வேன் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனா். அவா்களை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் சுரேஷ் உயிரிழந்தாா். முனியம்மாள் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.