தாராபுரம் அருகே தனியாா் பள்ளியில் பயிலும் 26 மாணவ, மாணவிகளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராபுரத்தை அடுத்த ராமமூா்த்தி நகரில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவா் ஒருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தெரியவந்தன. இதையடுத்து, பள்ளியில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 26 மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், கடந்த செவ்வாய்க்கிழமை 15 மாணவா்களுக்கும், புதன்கிழமை 11 மாணவா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், மாணவா்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.