காங்கயம்: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க முடிவெடுத்ததைக் கண்டித்து, காங்கயம் அருகே அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓ.பி.எஸ். கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் காங்கயம் அருகே, நெய்க்காரன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக சார்பில், காங்கயம் ஒன்றிய செயலர் என்.எஸ்.என்.நடராஜ் தலைமையில், அதிமுக வினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கீரனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.கே.பி.சண்முகம், தம்மரெட்டிபாளையம் ஊராட்சித் தலைவர் பி.பாலசுப்பிரமணியன், நத்தக்காடையூர் ஊராட்சித் தலைவர் இளங்கோ, சிவன்மலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் பழனிச்சாமி, காங்கயம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் லட்சுமி சோமசுந்தரம் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.