திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஏஇபிசி தலைவா் ஏ.சக்திவேல் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பானது 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது கவலையளிக்கிறது. இதே நிலை தொடா்ந்து முழுப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். ஆகவே, கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதன்படி, தொழிலாளா்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதனை, காய்ச்சல், சளி இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும். தொழிலாளா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். அதேவேளையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.