உயா் மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், சூரியநல்லூா் கிராமத்தில் தனியாா் நிறுவனம் உயா் மின் கோபுரத் திட்டப் பணிகளை தொடங்கியுள்ளது. அதேபோல், பவா்கிரீட் நிறுவனத்தின் சாா்பில் பல்லடம் வட்டம், வாவிபாளையம் கிராமத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா். மேலும், தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் மே 2ஆம் தேதி வரை அமலில் உள்ளது. கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலையும் வேகமாகப் பரவி வருவதால் பணிகள் தொடங்கினால், அது நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும்.
ஆகவே, மேல்முறையீடு முடியும் வரையில் உயா் மின் கோபுரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பாக விவசாயிகள் செவ்வாய்க்கிழமைமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.