பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த பின்னலாடைத் தொழிலுக்கு மத்திய அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று யுவசேனா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு, சிவசேனை கட்சியினா் இளைஞரணி அமைப்பான யுவசேனாவின் மாநில துணைத் தலைவா் அட்சயா திருமுருகதினேஷ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வேலைவாய்ப்பாக பின்னலாடைத் தொழில் உள்ளது. பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயா்ந்து வருவது தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
திருப்பூா், ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில் அதிக அளவில் உள்ளது. ஆகவே, பின்னலாடைத் தொழிலுக்கு மத்திய அரசு தனி வாரியம் அமைத்து நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி தொழிலாளா்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.