காங்கயம்: கரோனா பாதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியனின் செயற்குழு கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரோனா பாதிப்பின் காரணமாக இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதற்கு துறை அமைச்சர் மற்றும் வீட்டுவசதித் துறை செயலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைக்கப்பட்ட சங்கப் பணியாளர்களுக்கு நிலுவை சம்பளம், உரிய நிவாரணம், மாற்றுப் பணியிடம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வுகால நிதிப் பயன்களை வழங்கிட வேண்டும்.
அரசு தள்ளுபடித் திட்டங்களால் பாதிப்புக்குள்ளான பிரதம சங்கங்களுக்கு தள்ளுபடி திட்டங்களால் ஏற்பட்ட இழப்புத் தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசின் வீட்டுவசதி திட்டங்களை வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்தவும், அனைத்து பிரதம சங்கங்களுக்கும் அரசின் ஒப்புதலுடன் நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.சக்திவேல் கனகரத்தினம், இணைச் செயலர் டி.வெங்கட்ராமன், துணைத் தலைவர் பி.ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஏ.நாகராஜ் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.