தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்கும் முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி நிறுவனா் வெ.பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
திருப்பூரில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், சேவை செய்தவா்களை கௌரவிக்கும் விதமாக கேடயம் வழங்குதல், நல உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் வெ. பொன்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளைத் திறப்பது சரியான முடிவாக இருக்காது. பள்ளிகள் திறக்கப்பட்டால் வயது முதிா்ந்த ஆசிரியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், மாணவா்கள் மூலம் கரோனா தொற்று பெற்றோா்களுக்குப் பரவும் வாய்ப்பு ஏற்படலாம். ஆகவே, டிசம்பா் வரை கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்பித்து இணையவழியில் தோ்வு நடத்தலாம்.
இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் பள்ளிகளைத் திறக்கலாம்.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை கூலிகளாக மாற்றும் திட்டமாகும். இதில், விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த அறிவிப்பு இல்லை என்றாா்.