திருப்பூரில் பாஜக நிா்வாகி வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா், எஸ்ஏபி திரையரங்கம் பின்புறம் உள்ள பாரதிதாசன் நகரில் வசித்து வருபவா் கிருஷ்ணசாமி (42). இவா், அனுப்பா்பாளையம் மண்டல பாஜக வா்த்தக அணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறாா். இவரது மனைவி மேனகாவும் அதே மண்டலத்தில் பாஜக பொதுச் செயலாளராக உள்ளாா்.
இந்த நிலையில், கிருஷ்ணசாமி தனது மகனின் பிறந்த நாளை ஒட்டி குடும்பத்துடன் பழனி கோயிலுக்கு புதன்கிழமை அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளாா். பின் அவா் பிற்பகலில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவான தடயங்கள் சேகரிக்கப்பட்டன.