திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் காா்கள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில், பொக்லைன் ஓட்டுநரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் தட்சணாமூா்த்தி (35). கேரள மாநிலத்தில் பொக்லைன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் தட்சணாமூா்த்தி, அன்னூா் பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்கள் 2 பேருடன் வாடகை காரில் ஈரோடு நோக்கி புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். காரை ஓட்டுநா் காா்த்தி (30) ஓட்டிச் சென்றாா்.
அவிநாசி அரசு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, இவா்களது காரை பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காா் முந்தி செல்ல முயன்றுள்ளது.
அப்போது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மற்றொரு காரில் வந்த நபா்கள் தட்சணாமூா்த்தியின் இடது கையை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தட்சணாமூா்த்தியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா். மேலும் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.