காங்கயம்: ஊதியூர் அருகே இரு தினங்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் உயர்மின் கோபுர அடித்தளம் அமைக்க முயன்ற அதிகாரிகளிடம், விளக்கம் கேட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி, வியாழக்கிழமை காங்கயம் டி.எஸ்.பி., அலுவலகத்தை 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் முதல் கோவை வரை 765 கி.வோ மின் பாதை புதியதாக அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே சங்கரண்டாம்பாளையம் கிராமம் செல்வாரஜ் என்பவரது தோட்டத்தில் மின்கோபுரத்திற்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் செய்ய இரு தினங்களுக்கு முன்பு, அதிகாரிகள் காரில் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அப்பகுதி விவசாயிகள், அதிகாரிகளிடம், இங்கு வேலை செய்ய மாவட்ட ஆட்சியரின் அனுமதிக் கடிதம் வைத்திருக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முடிந்து, அதிகாரிகள் கிளம்பும்போது, அவர்கள் வந்த காரின் டயரில் காற்று குறைந்திருந்தது. இதையடுத்து உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் புகாரின் பேரில் 19 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு குழு சங்க நிர்வாகி ஈசன், தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் குமார், புரட்சிகர முன்னணி அமைப்பின் காங்கயம் நிர்வாகி கவி, மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா செயலர் எம்.திருவேங்கடசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் மணி உள்ளிட்ட அமைப்பினர் காங்கயம் டி.எஸ்.பி., தனராசு, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து விவசாயிகள் 150-க்கு மேற்பட்டோர் டி.எஸ்.பி., அலுவலக முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடத்துவது,. விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவது, சம்மந்தப்பட்ட பொறியாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., தனராசு உறுதிமொழி அளித்ததையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.