காங்கயம்: காங்கயத்தில் தேங்காய் பருப்பு விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் தென்னை விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
காங்கயம், குண்டடம், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இந்தக் களங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலிருந்தும் தேங்காய் தருவிக்கப்பட்டு, மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணை நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இது தவிர ராஜஸ்தான், கேரளா, மும்பை, கொல்கத்தா, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
காங்கயம் பகுதியில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகளில் இருந்து டேங்கர் லாரிகள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்டு வடமாநிலங்களான குஜராத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலமும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தேங்காய் உலர்களம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சை, மதுரை மற்றும் வடமாநிலங்களைச் சார்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் காங்கயம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.85 முதல், ரூ.88 வரை விற்பனையானது. 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ.2 ஆயிரமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக விலை உயரத் தொடங்கியது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.107 முதல் ரூ.110 வரை விலை போனது. தற்போது மேலும் உயர்ந்து, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கிலோ ரூ.116 ஆக உள்ளது. 15 கிலோ கொண்ட ஒரு டின் தேங்காய் எண்ணெய் ரூ.2 ஆயிரத்து 600 ஆக இருந்தது.
இது குறித்து தேங்காய் உலர் களங்கள் நிர்வாகிகள் கூறியபோது, வழக்கமாக ஆவணி கடைசியிலிருந்து வட மாநிலங்களில் நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வரும் காலங்களில் தேங்காய் எண்ணெயின் தேவை அதிகரிக்கும். இதனால் தேங்காய் பருப்பு விலை உயரும். இந்த ஆண்டும் அதையொட்டி விலை உயர்ந்துள்ளது. இந்த விலையானது மேலும் கூட வாய்ப்பிருக்கிறது, என்றனர்.
தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால், தேங்காயின் விலையும் தரத்தை பொறுத்து ரூ.13 முதல் ரூ.19 வரை விலை போகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.