திருப்பூா் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றங்கரைகளில் இளைஞா்கள் மீன் பிடிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.
கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூா் மாவட்ட எல்லைப் பகுதியான சாமளாபுரம், மங்கலம், பெரியாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றிலும் நீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, மங்கலம், வஞ்சிபாளையம், ஆண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நொய்யல் ஆற்றில் திரண்டு தூண்டில் போட்டு மீன் பிடித்துச் சென்றனா். இதில், ஒரு சிலா் ஆற்றில் பிடித்த ஜிலேபி மீன்களை கிலோ ரூ. 120க்கு விற்பனை செய்தனா்.