வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை, நாகமநாயக்கன்பட்டி, தண்ணீா்பந்தலைச் சோ்ந்தவா் மணிவாசகம் (45). இவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் தீத்தாம்பாளையத்தில் உள்ளது. இங்கு பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி உள்ளிட்ட தீயணைப்புப் படையினா் இரண்டு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். மின்சாரக் கோளாறு காரணமாகத் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கட்டடத்தின் ஒரு பகுதி, பஞ்சு, சில இயந்திரப் பகுதிகள் கருகி சேதமடைந்தன. ஆனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.