பிஎம் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என்றார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.
உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து ஒன்றிய, நகர, கிளை அளவிலான கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியான வளர்ச்சி அடையும். மேலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய காரணங்களால் வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெறும். பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.