திருப்பூர் மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள ரெட்டிபாளையம் பிரிவு, தாராபுரம் வட்டம் ஆலாம்பாளையம் ஆகிய இடங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். இந்நிலையில், விவசாயிகளின் தொடர் காத்திருப்புப் போராட்டம் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
இதில், ரெட்டிபாளையம் பிரிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 750 கிலோ வாட் மின் திட்டத்தை விளை நிலங்களில் வழியாக செயல்படுத்தக்கூடாது. மத்திய, மாநில அரசுகளின் அனுமதியைப் பெறாத தனியார் கார்ப்பரெட் நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
காவுத்தம்பாளையம் ஏரி ஆயக்காட்டு நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்கக்கூடாது என்றனர். இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.