காங்கயம்: வேளாண் திருத்த சட்டங்களைக் கண்டித்து காங்கயத்தில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி என்னும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னணியின் நிர்வாகி தென்னரசு தலைமை வகித்தார். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பகுதி நிர்வாகிகள் விடியல், வானதி, கவி, திராவிடர் கழகத்தின் காங்கயம் நகரத் தலைவர் மணிவேல், மதிமுக ஒன்றியச் செயலர் மணி, தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ச.கருப்பையா, ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட மகளிரணி தலைவர் சாவித்ரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், கிறிஸ்து போதகர் ஐக்கியம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.