அவிநாசி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு தொழிலாளி உயிரிந்தார். மேலும் நடந்து சென்ற இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.
நம்பியூர் வெள்ளங்கோவில்பாளையம் கருப்பன் மகன் மனோகரன்(30). சர்வீஸ் ஸ்டேசன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சனிக்கிழமை மாலை தனது முதலாளி ஆறுமுகத்துடன்(64), இருசக்கர வாகனத்தில் அவிநாசிலிங்கம்பாளையம் சிறு பாலம் அருகே வரும் போது, அவிநாசி நோக்கி வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் அவ்வழியாக நடந்து சென்ற இரு பெண்கள் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடந்து சென்ற அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி(41), செல்வராஜ் மகள் சந்தியா(18) ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.