காங்கயம்: உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கயத்தில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற மாவட்டத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த பெண்ணின் கிராமத்திற்குச் சென்று ஆறுதல் கூற முற்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்திரப்பிரதேச காவல்துறையினர் தடுத்து, கைது செய்துள்ளனர்.
இந்த கைதைக் கண்டித்து, காங்கயம் பேருந்து நிலையம் அருகே, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் ப.கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், உ.பி. காவல்துறைக்கு எதிராகவும், ஆளும் உ.பி. அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பண்டுபாய், நகரத் தலைவர் சிபகத்துல்லா, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் எஸ்.ஷேக் சாதுல்லா, காங்கயம் வட்டார தலைவர் சத்தியநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.