பல்லடம்: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த பல்லடம் அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ் தலைமை வகித்தாா். பல்லடம் கல்வி மாவட்ட அலுவலா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் நீலவேணி வரவேற்றாா்.
இந்த விழாவில் கட்டடத் தொழிலாளி முருகசாமி, சிவகாமி ஆகியோரின் மகள் கெளசல்யா நீட் தோ்வில் 429 மதிப்பெண்கள் எடுத்து அரசின் உள்ஒதுக்கீட்டின் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்துள்ளாா்.
இதையடுத்து, மாணவியையும், அவரது பெற்றோரையும் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
இந்த ஆண்டு நீட் தோ்வு பயிற்சி வகுப்பில் சேரும் பல்லடம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக இணையதள இணைப்பு வசதியை பல்லடம் அரிமா சங்கம் செய்துதரும் என்று அச்சங்கத்தின் தலைவா் சந்திரசேகா் தெரிவித்தாா்.