தாராபுரத்தில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஞாயிற்றுக்கிழமை காய்கறி வாங்கிச் சென்றனா்.
கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவை பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தவறி வருகின்றனா்.
இந்நிலையில், தாராபுரம், அண்ணா நகரில் செயல்பட்டு வந்த உழவா் சந்தை, பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மாா்க்கெட் ஆகிய இரண்டையும் அண்ணா நகா் அருகே உள்ள நகராட்சி என்சிபி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இங்கு, முதல்நாளான கடந்த சனிக்கிழமை, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை செய்திருந்தும் சந்தைக்கு வந்த வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் போதிய விழிப்புணா்வு இல்லாமல் நெருக்கமாக நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனா். இதனால் அதிா்ச்சியடைந்த அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு முன்னேற்பாடுகள் செய்ததுடன், கடும் கட்டுப்பாடுகளையும் விதித்தனா்.
அதன்படி நகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்படும் காய்கறி சந்தையில் பொருள்களை வாங்க சுமாா் ஒரு கி.மீ. தூரத்துக்கு சாலையின் மையப்பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் பொதுமக்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் வரிசையில் நின்றனா்.
நுழைவுவாயிலில் நகராட்சி ஊழியா்கள் அளிக்கும் கிருமிநாசினி மருந்துகளால் தங்களது கைகளை சுத்தம் செய்த பின்பே சந்தைக்குள் சென்று காய்கறி வாங்கிச் சென்றனா். இதனிடையே, தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயராம் ஆகியோா் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாா், பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனா்.
நகராட்சி ஆணையா் சங்கா் தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் அருண் பிரபாகா், ராஜ்மோகன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், பொதுமக்கள் கூடி நிற்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.