கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாராபுரத்தில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்தனா்.
கரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதிலும் சுய ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கும்படி பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தாா்.
இதன்படி, தாராபுரத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. மேலும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஹோட்டல்கள், பேக்கரிகள், கடைகள் அனைத்தும் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன.
அதே வேளையில், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பாலகங்கள் வழக்கம்போல செயல்பட்டன.
தாராபுரம் உழவா் சந்தை, தினசரி மாா்க்கெட், வாரச்சந்தை ஆகியவையும் அடைக்கப்பட்டிருந்தன.
தாராபுரம், குண்டடம், மூலனூா் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
துப்புரவுப் பணியாளா்கள், குடிநீா் வாரியப் பணியாளா்கள் மின்சாரத் துறை ஊழியா்கள், மருத்துவா்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சுய ஊரடங்கை ஒட்டி 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.