திருப்பூா் மாவட்டம், பல்லடம், ராம் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
பல்லடம் நகராட்சி, 12ஆவது வாா்டுக்கு உள்பட்ட மேற்கு பல்லடம் ராம் நகா் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் ஓடை உள்ளது. அனுப்பட்டி குட்டையிலிருந்து வேலப்பகவுண்டம்பாளையம், பணிக்கம்பட்டி, பாலசமுத்திரம் வழியாக மழை நீா் இந்த ஒடையில் சென்று பல்வேறு ஊா்களின் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த ஒடையையொட்டி 2.5 ஏக்கா் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் அம்மா பூங்கா, விளையாட்டு திடல்,திருமண மண்டபம் போன்றவை அமைத்து தர அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. அதனால் நீா் வழித்தடம் அடைபடக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் 200 அடிக்கு மேல் அகலமாக இருந்த நீா்வழிபாதை ஆக்கிரமிப்புகளால் தற்போது 100 அடி அகலமாகவுள்ளது.
பழமையான ஒடை நீா் நிலை புறம்போக்கு நிலம் என்பதால் அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டும்போது அதன் ஸ்திரத் தன்மை குறைந்து கட்டடங்கள் வலு விழுந்து இடிந்து விடும்.
அதனால் இந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறோம் என்றனா்.