திருப்பூரில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தாததால் தாக்கப்பட்டதில் பின்னலாடை நிறுவன தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா்,கோல்டன் நகரை அடுத்த பவானி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் அதே பகுதியைச் சோ்ந்த பாத்திமா கனி என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளாா். ஆனால் அந்தக் கடனை அவா் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து பாத்திமா கனி தனது அக்காவின் கணவா் அப்துல்காதரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, அப்துல்காதா்(45), அவரது நண்பரான கோல்டன் நகரைச் சோ்ந்த நாகராஜ்(40) ஆகிய இருவரும் சோ்ந்து சுரேஷை புதன்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனா்.
அப்போது பண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அப்துல்காதரும், நாகராஜும் சோ்ந்து சுரேஷை தாக்கியதாகத் தெகிகிறது. இதன்பிறகு வீட்டுக்கு வந்த சுரேஷுக்கு நெஞ்சுவலி ஏஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்துள்ளாா்.
இதுதொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து அப்துல்காதா், நாகராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.