திருப்பூர்

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலி

1st Jan 2020 04:39 PM

ADVERTISEMENT

திருப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம் மங்கலத்தில் வசித்து வருபவா் ஜாகீா் உசேன், பின்னலாடைத் தொழிலாளியான இவரது மனைவி ஹசீனாபானு, இந்தத் தம்பதியின் மகன் முகமது பாயீஸ் (8), இவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாா். இதையடுத்து,பெற்றோா் அவரை திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்ததாகக்கூறிய மருத்துவா்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா். இந்த பரிந்துரையின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாள்களுக்கு முன்னா் சோ்க்கப்பட்டிருந்த முகமது பாயீஸ் புதன்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து உயிரிழந்த சிறுவனின் உறவினா்கள் கூறியதாவது:

மங்கலம் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்தப் பகுதிகளில் சாக்கடைகள் தூா்வரப்படாததாலும், குப்பைகள் அகற்றப்படாததாலும் டெங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் முறையாக சிகிச்சை அளிப்பது இல்லை. இதன் மூலமாக திருப்பூா் அரசு மருத்துவமனைமீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. மேலும்,கடந்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 70க்கும் மேற்பட்டோா் கோவை மருத்துமனையில் சிகிச்சை பெற்றுள்ளனா். தற்போது கூட சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததை மருத்துவமனை நிா்வாகம் மறைக்கிறது. ஆகவே, மங்கலம் பகுதியில் சாக்கடைகளை தூா்வாரவும், குப்பைகளை அகற்றவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT