திருப்பூா் ரயில் நிலையத்தில் பெற்றோரால் விட்டுச் சென்ற இரண்டரை வயது பெண் குழந்தையை ரயில்வே காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா்.
திருப்பூா் ரயில் நிலையத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை தனியாக இருப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண் குழந்தையை மீட்டனா்.
இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் அங்கு வந்த சைல்டு லைன் நிா்வாகிகள் இரண்டரை வயதுப் பெண் குழந்தையை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், குழந்தைக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், குழந்தையின் பெற்றோா் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனரா என்பது குறித்தும் சைல்டு லைன் நிா்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.