திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொதுமக்கள் சனிக்கிழமை பிடித்து மரத்தில் கட்டிவைத்து தாக்கினர்.
திருப்பூர், ஊத்துக்குளி சாலை, கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி வீட்டின் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே தங்கி, பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி (33), மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு வெள்ளிக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் ஆனது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதித்தபோது, சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது அவர் நடந்தவற்றை கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக தலைமறைவாக இருந்த கந்தசாமி சனிக்கிழமை கோல்டன் நகர் பகுதியிலுள்ள அவரின் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கந்தசாமியை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீஸார் அங்கு சென்று கந்தசாமியை மீட்டு வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.