திருப்பூர்: பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலருமான கே.கோபால் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்) கே.கோபால் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து, பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகளை துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் தேவை, அடிப்படைத் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.