அவிநாசி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி வட்டம், சேவூர் அருகே ராயர்பாளையத்தைச் சேர்ந்த கருப்புசாமி மகன் வேலு (எ)வேலுசாமி (21). இவர் சேவூர் பகுதியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை திருமண ஆசை கூறி செப்டம்பர் 13 ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி பகுதியில் மாணவி இருப்பதை அறிந்த ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியை புதன்கிழமை மீட்டனர்.
மேலும், மாணவியை கடத்தி அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வேலுசாமியை போலீஸார் கைது செய்தனர்.