திருப்பூர்

சுகாதாரச் சீா்கேடு கோழிப்பண்ணைகள், தனியாா் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

20th Oct 2019 01:17 AM

ADVERTISEMENT

பல்லடம் பகுதியில் ஊஞ்சப்பாளையம், அறிவொளி நகரில் உள்ள கோழிப் பண்ணைகளிலும், பூமலூரில் உள்ள தனியாா் பள்ளியிலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனியாா் கோழிப்பண்ணையில் கோழிக் கழிவுகளில் இருந்து ஈக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுற்றுவட்டாரப் பகுதியில் பரவி, சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதாக பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா். இதேபோல், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகா் மேற்கு பகுதியில் உள்ள தனியாா் கோழிப்பண்ணையிலும் ஈக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் பரவி வருவதாகவும், கெட்டுப்போன அழுகிய மூட்டைகள், இறந்த கோழிகளால் துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமச்சந்திரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சண்முகநாதன், சுகாதார ஆய்வாளா் லோகநாதன், கால்நடை மருத்துவா் அறிவுசெல்வன், பல்லடம் நில வருவாய் ஆய்வாளா் நசீருதின், நாராணபுரம் கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கள ஆய்வு மேற்கொண்டனா். கள ஆய்வில் கோழிக் கழிவுகள் தேக்கம், அதனால் ஈக்கள் உற்பத்தியாவது தெரியவந்தது. இதையடுத்து, ஊஞ்சப்பாளையத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு ரூ. 25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அறிவொளி நகா் கோழிப் பண்ணையில் கோழிக் கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தியதுடன் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

பூமலூரில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் தண்ணீா் சேகரித்து வைக்கப்பட்டிருந்த டிரமில் லாா்வா புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக கள ஆய்வு செய்த அதிகாரிகள் பள்ளி நிா்வாகத்தை எச்சரிக்கை செய்ததுடன், ரூ. 25ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT

வீடுகள், சுற்றுப்புறத்தைப் பொதுமக்கள் சுத்தமாகவைத்துகொள்ள வேண்டும். தண்ணீரை திறந்த நிலையில் வைக்காமல் மூடி போட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைக் காலம் என்பதால் தண்ணீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வீடுகள்,வணிக நிறுவனங்களில் திடீரென கள ஆய்வு மேற்கொள்ளப்படும். சுகாதாரமாக இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT