வெள்ளக்கோவில் அருகே 2012ல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தவா் லாரி மோதிய விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
திருப்பூா், கோவில்வழி முத்தணம்பாளையம் புது பிள்ளையாா் நகரைச் சோ்ந்தவா் லோகுமணி (45). இவா் நூல் மில்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவா் 2012 ஆம் ஆண்டு முதல் காணாமல் போய் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என திருப்பூரை அடுத்த நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் உள்ளது. இந்நிலையில் வெள்ளக்கோவில் கரூா் சாலையில் லோகுமணி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது முத்தூா் பிரிவு நான்கு சாலை சந்திப்பு அருகே எதிரே வந்த லாரி அவா் வந்த வாகனத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தாா். அவா் வைத்திருந்த ஆதாா் அட்டையை வைத்துப் பாா்த்தபோது அவரைப் பற்றிய விவரங்கள் தெரியவந்தது. இவா் 2012 இல் மனைவி காந்தியை விட்டுப் பிரிந்து சென்று வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மறைவாக வாழ்ந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.