திருப்பூர் மாவட்டம், உடுமலை வனப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததுடன் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட 5 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகத்தில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இதனால் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சின்னாறு செக்போஸ்ட் செல்லும் வழியில் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள சரக்குப்பட்டி என்ற இடத்தில் மர்ம நபர்கள் 5 பேர் அமர்ந்து புதன்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த உடுமலை வனச் சரகர் தனபால், "காப்புக் காட்டுக்குள் மது அருந்தக் கூடாது, இது சட்டப்படி குற்றம். உடனடியாக இங்கிருந்து செல்லுங்கள்' என்று அந்த நபர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த நபர்கள், வனச் சரகர் தனபாலிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக 5 பேரும் வன அலுவலர்கள் உதவியுடன் உடுமலை வனச் சரகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
விசாரணையில், 5 பேரும் திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அப்துல் கலாம் மகன் ஷாஜகான் (49), கிருஷ்ணசாமி மகன் பழனிசாமி (50), குருசாமி மகன் சக்தி (50), காளியப்பன் மகன் ராஜேந்திரன் (49), ஜெகதீஷ் மகன் வேணுகோபால் (48) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.