சேவூர் அருகே குளம், குட்டைகளில் மண் அள்ளிய இருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
அவிநாசி வட்டாரத்தில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முறியாண்டம்பாளையம் குளப்பகுதியில் முறைகேடாக மண் அள்ளிய ஒரு டிப்பர் லாரி, மண் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பிடித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவிநாசி வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் அளித்த புகாரின் பேரில் மண்திருட்டில் ஈடுபட்ட முறியாண்டம்பாளையம் ஊராட்சி செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாகன உரிமையாளர் சின்னச்சாமி, செல்லகுமார் ஆகியோர் மீது சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.