உடுமலை அருகே அமராவதி அணைப் பகுதியில் அமைந்துள்ள முதலைப் பண்ணை சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. இங்கு மிகவும் பிரபலமான மீன் பண்ணை, அணையின் முன்பு அமைந்துள்ள அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவைகள் இங்கு அமைந்துள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் சென்னை, ஏற்காடு, அமராவதி அணைப் பகுதி ஆகியவற்றில் முதலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அமராவதி அணைப் பகுதியில் உள்ள முதலைப் பண்ணையில் கருஞ்சாம்பல், மஞ்சள் கலந்த மரநிறத்தில் என பல்வேறு வண்ணங்களில் 3 மாத முதலைகள் முதல் 30 வயது முதலைகள் வரை பராமரிக்க ப்பட்டு வருகின்றன.
இந்தப் பண்ணையில் பெண் முதலைகள் அதிக அளவில் இருந்ததால் கடந்த பல ஆண்டுகளில் அதிக அளவில் இனப் பெருக்கம் நடந்துதுள்ளன. இதனால் நாளடைவில் முதலைகள் எண்ணிக்கை பெருகியதால் வனத் துறையினரால் முதலைகளை முறையாகப் பராமரிக்க முடியாமல் போனது. மேலும், முதலைகளுக்கு உணவு வழங்க அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பகுதியில் அமைந்துள்ள சின்னாற்றில் 400க்கும் மேற்பட்ட முதலைகள் கொண்டுபோய் விடப்பட்டன. தற்போது இந்தப் பண்ணையில் 98 முதலைகள் (பெண் 72, ஆண் 26) பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோடை விடுமுறையால் அமராவதி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதலைப் பண்ணையைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.