உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆர்எம்எஸ்ஏ, எஸ்எஸ்ஏ ஆசிரியர்களுக்கு 2 மாதம் ஊதியம் வழங்க ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் ஓ.சுந்தரமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல்லடம் கருவூலத்துக்கு உள்பட்ட உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் (ஆர்எம்எஸ்ஏ, எஸ்எஸ்ஏ) ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கல்வித் துறை நிர்வாகிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகம் முழுவது பணியாற்றுகிறவர்களுக்கு ஊதியம் கிடைக்கும்போது பல்லடம் சார்நிலைக் கருவூலம் மட்டும் 62 ஆசிரியர்களைப் பழி வாங்குவதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை. இவர்களுக்கான ஊதியம் வழங்க மேலும் காலதாமதமானால் பாதிக்கப்பட்ட 62 ஆசிரியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.