அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான பரப்புரை காங்கயத்தில் உள்ள பாரதியார் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயம், பாரதியார் நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற இந்தப் பரப்புரையை காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மகேந்திரன், ப.சுசீலா ஆகியோர் பங்கேற்றுத் துவக்கி வைத்தனர். இதில், இப்பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்று, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் இலவச தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி, சுமையற்ற சமச்சீர் முப்பருவக் கல்வி, அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் உள்பட அரசு வழங்கும் சலுகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இப்பகுதியில் உள்ள பெற்றோர்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முன்னதாக இப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் காந்திய காமராஜர் மக்கள் இயக்கத்தின் மாநில செயலர் தங்க.தமிழழகன் கலந்து கொண்டு, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அதில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வேண்டும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்று பேசினார். இதில், காங்கயம் ரோட்டரி சங்க செயலர் செல்வராஜ், சங்கத்தின் தேர்வு செயலர் எம்.மோகன்ராஜ் மற்றும் பாரதியார் நகர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.