திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொகத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தாராபுரத்தில் ரைஸ் மில் பகுதியில் வசித்து வருபவர் உபயதுல்லா. இவரது மனைவி சசீர்பானு (59). இவர் தாராபுரம் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி கடந்த ஆண்டு
ஓய்வுபெற்றார்.
இந்த நிலையில், கேரளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு தனது கணவருடன் சசீர்பானு சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவலின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இது குறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.