திருப்பூர்

நீர்நிலைகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்

15th Jul 2019 10:08 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே நீர்நிலை பராமரிப்புப் பணிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகள் பராமரிப்புப் பணிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி,  மத்தியக் குழுவினர் ஜூலை 10 ஆம் தேதி முதல் திருப்பூரில் முகாமிட்டு நீர்நிலைப் பராமரிப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 
குண்டடம் அருகே சடையபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை பொருளாதார ஆலோசகர் (நீர்ப் பாதுகாப்பு, சேமிப்பு) சுஜாதா சர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஈஸ்வரசெட்டிபாளையம், பனப்பதி, எரகாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் கான்கிரீட் தடுப்பணைப் பணிகள், பண்ணைக் குட்டைப் பணிகள், தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சுகுழிப் பணிகள், மரக்கன்று நடும் பணிகளை ஆய்வு செய்தனர். 
ஆய்வின்போது  மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் ரமேஷ்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT