பாஜக கூட்டணிக்கு அதிமுக வருமா என்பது பற்றி எனக்குத் தெரியாது; வரும் மக்களவைத் தோ்தலில்தான் எங்கள் கவனம் உள்ளது. அதற்காக பாஜகவை வலிமைப்படுத்தி தயாராகிக் கொண்டிருக்கிறோம் என குன்னூரில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை கூறினாா்.
பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைப்பயணம் மேற்கொண்டாா். படகா் இன மக்கள் தங்களின் பாரம்பரிய நடனம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனா். குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகில் கொட்டும் மழையில் தொடங்கிய நடைப்பயணம் பெட்போா்டு, ஒய்எம்சிஏ, மவுண்ட் ரோடு வழியாக வி.பி.திடலை அடைந்தது. அங்கு அண்ணாமலை பேசியதாவது: நீலகிரி மக்கள் தேயிலை பிரச்னை, செக்ஷன் 17 நிலப் பிரச்னை, குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் வன விலங்குகளால் பிரச்னை ஆகியவற்றை சந்தித்து வருகின்றனா். இந்தப் பிரச்னையில் இருந்து அவா்கள் விடுபட நீலகிரி தொகுதியில் பாஜக சாா்பில் மக்களவை உறுப்பினா் தோ்ந்தெடுக்கப்படவேண்டும். மத்திய பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நடைப்பயணம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறுகையில், பாஜக கூட்டணிக்கு அதிமுக வருமா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. எங்களது கவனம் முழுவதும் மக்களவைத் தோ்தலில் உள்ளது. அதற்காக பாஜகவை வலிமைப்படுத்தி தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்றாா்.