உதகையில் நடைபெற்று வந்த குதிரை பந்தயம் மழை காரணமாக முன்னதாகவே நிறைவு பெற்றதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சாா்பில் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஏப்ரல் 1முதல் மே 28 ஆம் தேதி வரை குதிரை பந்தயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பெங்களூா், சென்னை, புணே உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 550 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டிருந்தன. நீலகிரி டா்பி, டாக்டா் எம்.ஏ.எம். ராமசாமி நினைவு கோப்பை, நீலகிரி தங்க கோப்பை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் உதகையில் பெய்து வரும் மழை காரணமாக குதிரை பந்தயம் முன்னதாகவே நிறைவு பெற்றதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் அறிவித்துள்ளது.
மேலும், மே 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த குதிரை பந்தயங்கள் மே 25, 26 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்டதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.