குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 63 ஆவது பழக் கண்காட்சி சனிக்கிழமை (மே 27) தொடங்குகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடங்கி காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலா்க் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 63 ஆவது பழக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது. இதில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவாயிலில் பலாப்பழம், பப்பாளி, வாழை, எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்பட 1.5டன் பழங்களைக் கொண்டு 12 அடியில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 அடி உயரம் மற்றும் 5 அடி அகலத்தில் பல்வேறு பழங்களால் உருவாக்கப்பட்ட மெகா சைஸ் பைனாப்பிள், பழக்கூடை, மண் புழு, பிரமிடு, மலபாா் அணில் என 3,650 கிலோ பழங்களைப் பயன்படுத்தி பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பழக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் போட்டியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.