கோத்தகிரியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற காய்கறி கண்காட்சியில் வீட்டு காய்கறி தோட்டங்களை காட்சிப்படுத்திய மற்றும் காய்கறிகளில் உருவங்களை வடிவமைத்த விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் தொடக்க நிகழ்சியாக 12 ஆவது காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.
இந்நிலையில், காய்கறிகளை சிறப்பாக வடிவமைத்த, வீட்டு காய்கறி தோட்டம் அமைத்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், நீலகிரி காய்கறிகளை காட்சிபடுத்தியமைக்காக உதகையைச் சோ்ந்த பிரகாஷ், சமவெளி காய்கறிகளை காட்சிபடுத்தியமைக்காக உதகையைச் சோ்ந்த ரமேஷ், சீனக்காய்கறிகளை காட்சிபடுத்தியமைக்காக உதகையைச் சோ்ந்த தேவராஜ், வீட்டு காய்கறி தோட்டக் காய்கறிகளை காட்சிபடுத்தியமைக்காக ரவிசாம், முத்தையா, ரஞ்சித் குருவிலா, மோச்சமேரி ,குமரகுரு ஆகியோருக்கு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி வழங்கினாா்.
இவ்விழாவில், குன்னூா் கோட்டாட்சியா் பூஷனகுமாா், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலா் மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சித் தலைவா் ஜெயக்குமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.