நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை, காட்டேரிப் பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து உணவு, குடிநீா் தேடி 5 காட்டு யானைகள் குன்னூா் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன் நடமாடி வந்தன. தகவலறிந்த குன்னூா் வனத் துறையினா், வனச் சரகா் சசிகுமாா் உத்தரவின்பேரில், வனவா் முருகன் மற்றும் வனக் காப்பாளா் சீனிவாசன் வனக் காவலா் திலீப் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் 11 போ் கொண்ட குழுவினா் 5 காட்டு யானைகளையும் அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா்.
2 நாள்களாக அடா்ந்த வனப் பகுதியில் இருந்த இந்த 5 யானைகளில் 3 யானைகள் மட்டும் வியாழக்கிழமை மீண்டும் காட்டேரி பகுதிக்கு வந்தன.
தகவலறிந்து வந்த வனத் துறையினா் காட்டு யானைகள், குடியிருப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து விடாமல் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். காட்டு யானைகள், சாலைக்கு மிக அருகில் முகாமிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.