நீலகிரி

உதகை நகா்மன்ற கூட்டத்தில் சலசலப்பு

30th Jun 2023 11:37 PM

ADVERTISEMENT

உதகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்வதில்லை எனவும், நகரில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுபடுத்த தவறிவிட்டதாகவும் கூறி அனைத்து கட்சி உறுப்பினா்களும் ஒருசேர எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகா்மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

உதகை நகா்மன்ற கூட்டம் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஏகராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தங்களது பகுதிகளில் பாதாளச் சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எவ்வித பணிகளும் முறையாக நடைபெறுவதில்லை எனவும், தற்போது வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் ஒப்பந்ததாரா்கள் முறையாக பணிகளை செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும் நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

அனைத்து உறுப்பினா்களும் எழுந்து நின்று தங்களது குற்றச்சாட்டை முன்வைத்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதியில்லாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், நகரில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 36 வாா்டுகளிலும் ஆக்கிரமிப்பில் உள்ள சமுதாயக் கூடங்களை மீட்டு அதனை புனரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் நகா்மன்ற உறுப்பினா்கள் கேட்டுக் கொண்டனா்.

உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிபடியாக நிவா்த்தி செய்யப்படும் என்று நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, துணைத் தலைவா் ரவிகுமாா் ஆகியோா் உறுதியளித்தனா்.

குன்னூா் நகா்மன்ற கூட்டம்: குன்னூா் நகா்மன்ற கூட்டம் தலைலா் ஷீலா கேத்ரின் தலைமையில் நடைபெற்றது.

உதகை நகராட்சி ஆணையரும், குன்னூா் நகராட்சியின் பொறுப்பு ஆணையருமான ஏகராஜ் முன்னிலை வகித்தாா்

இதில் , அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை நகராட்சி நிா்வாகம் கண்டு கொள்வதில்லை எனவும், சிறிய அளவிலான வீடுகளை கட்டும்போது அவா்களை தொந்தரவு செய்வதாகவும் நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

மேலும், நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் நடப்பதாகவும், இவற்றை நகராட்சி மூலம் எடுத்துச் சென்று பராமரிக்க திட்டமுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினா்.

கால்நடைகளை பராமரிக்க வசதியில்லை என்றும், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையா் தெரிவித்தாா்.

முன்னதாக, மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள குன்னூா் நகா்மன்ற உறுப்பினா் மு.ராமசாமிக்கு (திமுக) நகா்மன்ற துணைத் தலைவா் வாசிம்ராஜா (திமுக), அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சரவணகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT