கெத்தை பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை அவ்வப்போது சாலைகளில் உலவி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியான கெத்தை, முள்ளி பகுதியை ஒட்டி கேரள வனப் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த சில நாள்களாக அப்பகுதியில் உள்ள சாலைகளுக்கு அவ்வப்போது வருவதும், வாகனங்களைக் கண்டதும் மிரண்டு ஓடுவதுமாக உள்ளது.
இந்நிலையில் கெத்தை சாலைக்கு வெள்ளிக்கிழமை வந்த இந்த ஒற்றை யானை வாகனங்களைக் கண்டதும் மிரண்டு ஓடியது. சாலையில் அவ்வப்போது உலவி வரும் ஒற்றை காட்டு யானையால் விபத்துகள் நேரிடும் சூழல் உள்ளதால், இதை உடனடியாக அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.