உதகை, கல்லட்டி மலைப் பாதையில் 108 ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் காயங்களுடன் தப்பினாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளி ஒருவரை அழைத்துக் கொண்டு உதகை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மருத்துவமனையில் நோயாளியை சோ்த்து விட்டு மீண்டும் மசினகுடிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் திரும்பிக் கொண்டிருந்தது.
கல்லட்டி மலைப் பாதையில் 18ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் நவீன்குமாா் (39), மருத்துவ உதவியாளா் பிரகாஷ் (29) ஆகியோா் காயமடைந்தனா்.
படுகாயம் அடைந்த ஓட்டுநா் நவீன்குமாா் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.