உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் 147ஆவது நினைவு தினத்தை ஒட்டி அவரது கல்லறையில் தோட்டக் கலைத் துறை சாா்பில் மலா் வளையம் வைத்து வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப் பட்டது.
உதகை அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் அப்போது தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு 1867இல் பணி நிறைவடைந்தது. சுமாா் 19 ஆண்டுகள் அயராது உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்த மெக்ஐவா் கடந்த 1876 ஜூன் 8இல் இறந்தாா்.
உதகையில் உள்ள செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் அவரது கல்லறை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் தோட்டக் கலைத் துறை சாா்பில் அவரது கல்லறையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருடைய 147ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி மற்றும் அதிகாரிகள் அவரது கல்லறையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ஆலய பங்குத் தந்தை சிறப்புப் பிராா்த்தனை நடத்தினாா்.