உதகைக்கு கடந்த இரண்டு மாதங்களில் 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடைபெறுவது வழக்கம்.
இதனை காண உள்ளூா் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வருவா். அதன்படி, இந்த ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடைபெற்றது.
இதனால், உதகையில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஏப்ரல் மாதம் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை தாவரவியல் பூங்காவுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 அதிகம் என்றும், இதன் மூலம் தாவரவியல் பூங்காவுக்கு ரூ .4 கோடியே 73 லட்சத்து 84 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.63 லட்சத்து 98 ஆயிரத்து 332 அதிகம் என்றும் தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.