உதகையில் இதமான காலநிலை நிலவுவதால் இங்குள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலம் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கவும், குளிா்ந்த காலநிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனா்.
இந்நிலையில் விடுமுறை தினத்தை ஒட்டி உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை, சிம்ஸ் பூங்கா, கொடநாடு காட்சிமுனை என பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. சனிக்கிழமை 16,300 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
உதகையில் காலை நேரத்தில் மிக குறைந்த அளவாக 3.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், அதிகபட்சமாக 22.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்படுவதால், இந்த இதமான காலநிலையை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து மகிழ்கின்றனா்.